Monday, April 13, 2009

நிகழ்வே இன்பம்

நேற்றை நினைவின் சுவடே இல்லை

நாளைக் கனவென எதுவும் இல்லை

இன்றே இதுவே இப்பொழு தொன்றே

நன்றாய் நலமாய் சுகமாய் சுவையாய்

எண்ணும் மனதில் சுமைகள் இல்லை

கண்ணில் கவலை வரிகள் இல்லை

நிகழ்வே நிஜமென்றரியும் நெஞ்சில்

இகமோ பரமோ பிரிவோ இல்லை



Sunday, April 12, 2009

குழந்தைமை

இதமான மாலை ஒன்றில் தனியாக நடந்திருந்தேன்
விதமான எண்ணக் கூட்டம் ஒன்றொன்றாய் கலைந்த போதில்
புரியாத காரணத்தால் புன்னகை முகிழ்த்து நின்றேன்
அறியாத குழந்தை நாளை எளிதாகச் சென்றடைந்தேன்

Tuesday, April 7, 2009

யோகம் - 1

உடலின் உணர்வை முழுதும் மறந்து உள்ளில் உறைந்த போது
கடலாய் விரிந்த கவலை, கனவு , அறிவைத் தொலைத்த போது
மடலை விரித்து மகரம் தெளிக்கும் மலர்கள் கூட்டம் தெரியும்
ஜடமாய்க் கிடந்து அறியும் நேரம் மனதின் உருவம் புரியும்

Saturday, April 4, 2009

என் இறைவன்

என் முதல் உணர்வில் எனக்குள் இறைவன்
என் முதல் மூச்சில் முழுதாய் உணர்ந்தேன்
என் மனக் கண்ணீர் திருவடிப் பூக்கள்
என் குரல் சுருதி இறை அருள் நாதம்

ஹரி அருள் என்றும் என்னுள் ததும்பும்
ஹரன் அருள் கிரணம் எந்தன் இல்லம்
அம்பிகை அருள் என் நினைவில் தஞ்சம்
துதிக்கைத் தூரிகைத் துயரைத் துடைக்கும்

கண்ணன் கடைக் கண் வீரக் கவசமும்
கருணைத திரு மகள் காவல் வலைக்குள்
உறையும் எனக்குக் கவலைகள் இல்லை
பொருளோ புகழோ இனிப் பொருட்டில்லை